படித்ததில் பிடித்தது
இரண்டு வயதே நிரம்பிய ஒரு குழந்தை கீழ் வீட்டிலிருந்து எங்கள் வீட்டிற்கு வந்து கொஞ்சநேரம் விளையாடிச் செல்வது வழக்கம்.
ஒரு நாள் ஒரு துளித் தேனைத் தொட்டு அதன் நாக்கில் வைத்தேன். அக்குழந்தை சுவைத்தது.
பக்கத்திலிருந்த ஜாம் பாட்டிலைத் திறந்து அந்த ஜாமைக் கொஞ்சம் விரலில் தொட்டு அதன் நாக்கில் வைத்தேன் ருசிப் பார்த்துவிட்டுத் துப்பிவிட்டது.
மீண்டும் தேன் பாட்டிலைக் காட்டி தேனை நாக்கில் வைக்கச் சொல்லியது.
மறுநாள் வந்த குழந்தை வேறு விளையாட்டெல்லாம் முடித்துவிட்டு மீண்டும் அம்மேஜையருகே சென்றபோது, தேன் பாட்டிலைக் காட்டி நாக்கில் வைக்கச் சொல்லியது.
நான் வேண்டுமென்றே தெரியாததுபோல் ஜாம் பாட்டிலை எடுத்து திறக்க முயற்சிக்கும்போது, வேணா..வேணா..என்று அதை ஒதுக்கித் தள்ளி மீண்டும் தேன் பாட்டிலைக் காட்டி தேனை நாக்கில் வைக்கச் சொல்லியது. வைத்ததும் சுவைத்துவிட்டு மகிழ்ச்சியைக் காட்டியது.
இந்த நிகழ்வு,
அக்குழந்தை (குழந்தையும் தெய்வமும் ஒன்றல்லவா) தேன் பாட்டிலைக் குறிப்பிட்டு காட்டுவதும், தேனைத் தொட்டு அதன் நாக்கில் வைத்ததும் அது ரசித்து சுவைக்கும் அழகும்,
ஜாம் பாட்டிலைக் கையில் எடுத்தாலே வேண்டாம் வேண்டாம் என்று அது தலையை ஆட்டிக்கொண்டு கையால் அப்பாட்டிலை ஒதுக்கித் தள்ளும் அழகும், என் மனதைவிட்டு நீங்கா காட்சிகளாகும்.
அக்குழந்தை சென்றுவிட்டபின் நான் தனியே ஒருநாள் உட்கார்ந்திருந்தபோது, யோசிக்கலானேன்.
தேன் எப்படி உருவாகிறது.
ஜாம் எப்படி தயாரிக்கப்படுகிறது, என்று.
வலைத்தளத்தில் தேடும்போது கிடைத்த தகவல்கள்:
தேன்:
------
தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும்.
மருத்துவ குணமும் கொண்டது.
பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன.
தூய தேனில் தண்ணீரோ வேறு சுவையூட்டும் பொருட்களோ கொஞ்சமும் கலந்திருக்காது.
நீர்ம (திரவ) நிலையில் உள்ள தேன் கெட்டுப் போவது இல்லை.
தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, நுண்ணுயிர்களை (கிருமிகளை) வளர விடுவது இல்லை.
ஜாம்:
------
பலவித பழங்களோடு, சர்க்கரைப்பாகு, நிறமி (colouring powder) இவற்றையெல்லாம் சேர்த்து அரைத்து கூழாக்கி ஜாம் தயாரித்து பாட்டிலில் அடைக்கும்போது அது கெடாமல் இருப்பதற்காக பிரிசெர்வேட்டிவாக ரசாயனப்பொருள் சேர்க்கப்படுகிறது. இது உடம்பிற்கு ஆகாதாம்.
{In commercial jams there is always a preservative (mostly sodium benzoate or potassium metabisulfate) for longer shelf life. But not good for our life.}
ஆக,
இந்த இரண்டு சுவையான பொருட்கள், அவை உருவாகும் விதம், இவற்றோடு அக்குழந்தை அவைகளை சுவைக்கும் விதம்.
வழக்கம்போல் என் சிந்தனை சிறகடிக்க ஆரம்பித்துவிட்டது, 'லாஜிக்'கைத்தேடி.
தேன் என்பது, பல தேனீக்கள் பல தூரங்கள் பறந்து பலவகைப் பூக்களை நாடிச் சென்று அவைகளில் சுரக்கும் இனிமையான திரவத்தை மட்டும் தனியே உறிந்தெடுத்து அவற்றை ஓர் இடத்தில் ஒரு தேன்கூட்டில் வந்து சேகரித்து வைப்பதால் உண்டாகும் ஒரு திரவப் பொருளாகும்.
அத்தனை தேனீக்களின் உழைப்பு அதில் இருக்கிறது. அத்தனை வகை மலர்களின் இனிய திரவங்கள் அதில் உன்னன.
எல்லாம் இயற்கையாக.
எல்லாம் ஒரிஜினலாக.
எல்லாம் இனிமையாக.
அக்குழந்தை மீண்டும் மீண்டும் கேட்டு சுவைக்குமளவு திகட்டாத ஒன்றாக,
தேனைப் பார்க்கின்றேன், நான்.
என் சிந்தனை குழந்தையின் சுவையைக் கடந்து, இப்போது நான் தினம் திகட்டாமல் கேட்டுக்கொண்டிருக்கும் இளையராஜா இசைமீது தாவிச் செல்கிறது.
ஆம்,
ஒப்புமை செய்ய ஆரம்பித்துவிட்டது. என் மனதில் சட்டென்று தேனுக்கு இணையாக வந்த அந்த இளையராஜா இசையுணர்வை சரிபார்க்க விரும்பியது மனது.
தபலாவிற்குத் தனியாக ஆட்கள், டோலக்கிற்கு தனி ஆள், மணியொலியிசைக் கருவிகளுக்குத் (chimes) தனி ஆள்.
மேற்கத்திய தாளவகையாம்,
ட்ரம்ஸ் செட், பாங்கோஸ், கோங்காஸ், ட்ரம் பேட்ஸ் (pads) இவைகளுக்கு தனித் தனி ஆட்கள்.
பேஸ், க்ளாசிகல், எலக்டரிக், மெட்டல் என்று அத்தனை கிட்டார் வகைகளுக்கும் தனித் தனி ஆட்கள்.
ஃப்ளூட், க்ளாரினெட், ஷெனாய், சாக்ஸாஃபோன், ட்ரம்பட் வகைகளுக்குத் தனி தனி ஆட்கள்.
கீபோர்ட்ஸ், வீணை, சிதார், சாரங்கி, அக்கார்டியன், பாஞ்சோ இவைகளுக்குத் தனி தனியாக ஆட்கள்.
ஒரு பக்கம் ஸ்ட்ரிங் செக்ஷன் என்று அத்தனை வயலின்கள் ஆட்களோடு ஒரு குழுவாக, அது தவிர செலோ, வயோலா, டபுள் பேஸ், என்று இவைகளுக்கும் தனித் தனி ஆட்கள்.
இப்படித்தனி ஆட்களும் தனித்தனி தேனீக்களாக, தனித்தனி இசைக்கருவிகளும் தனித்தனி மலர்களாக.
ஓர் இசைக்கு இவ்வளவு கருவிகள் தேவையா.
ஆம் ஓர் இனிய இசைக்கு இவ்வளவும் தேவையே.
மேலும் இக்கேள்வி நம் மனதில் வருவதற்குமுன், இன்னொரு கேள்வி எழுந்திருக்கவேண்டும்.
அதாவது ஏன் இத்தனைக் கருவிகள் இவ்வளவு வேலைப்பாடுகளுடன் செய்யப்படவேண்டும் என்று.
தவிர அதை இயக்குவதற்கு பயிற்சிபெற்ற இசைக்கலைஞர் வேறு அமர்த்த வேண்டும்.
ஏதாவது காரணம் கண்டிப்பாக இருக்கும் என்று நம்பி யோசித்தோமானால் அப்போது தெரியவரும், ஒவ்வொரு கருவியும் எழுப்பும் ஒலியானது தனித்துவம் மிக்கது என்பதும். நல்லதொரு இசைக்கு அக்கருவிகள் தேவை என்பதும்.
உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், ராஜாசாரின் இசை தனித்து நமக்குப் பிடித்தமானதொன்றாக இருப்பதற்குக் காரணமே, நான் நம்புவது, இந்த இசைக்கருவிகளை அவர் ஜதை சேர்த்து ஒலிக்கச் செய்வதுதான் அல்லது இரண்டுக்குமேல் கூட்டுசேர்த்து இசைக்கச் செய்வதுதான், என்று.
நாம் புல்லாங்குழல் மட்டும்தான் ஒலிப்பதாய் நினைத்துக் கொண்டிருப்போம். அது புல்லாங்குழலுக்கான நோட்ஸ்தான். ஆனால் மிக அழகாக புல்லாங்குழலே வேறொரு தொனியில் ஒலிக்கக் கேட்போம். அது தனி சுகத்தைத் தரும்.
நான் உன்னிப்பாகக் கவனித்ததில் எனக்குத் தெரிந்தவரை கீழ்க்கண்டவாறு இசைக்கருவிகள் ஒரேயொரு ஒலிபோல (ஒரே மெட்டில்) ஜதையாகவோ, கூட்டாகவோ ஒன்று சேர்ந்து ஒலிக்கச் செய்யப்பட்டிருக்கின்றன.
ஃப்ளூட் + வயலின்
வீணை + சிதார்
தப்லா + டோலக்
தப்லா + கோங்காஸ்
தப்லா + பேஸ் கிட்டார்
வயலின் + சாரங்கி
கீபோர்ட் + எலக்ட்ரிக் கிட்டார்
கிட்டார் + மொராக்கஸ் (chimes வகை)
இதுபோல் இன்னும் இன்னும்..
இப்படி ஒரேவகை மெட்டுக்கு ஜதையாக ஒலிக்கச் செய்யவும், அல்லது வேறுவேறு மெட்டுக்களுடன் (கௌண்டர் பாயிண்ட் போலவும்) ஒரே நேரத்தில் கூட்டாக ஒலிப்பதற்கும் குறிப்பிட்ட இசைக்கருவிகளை ராஜா சார் கூட்டு சேர்ப்பார் அத்தனைக் கருவிகளும் அதன் அதன் பங்குக்கு இசையை வெளிப்படுத்தும்போது அப்பப்பா மிகப்பெரியதொரு சுகத்தை அதைக் கேட்பதில் உணரலாம்.
அதுமாதிரி இசைக்கருவிகளைத் தேர்ந்தெடுத்து நல்ல இசையை வரவைக்கும் திறன் ராஜாசாருக்கே உள்ள தனித்துவம்.
அவரது வெற்றியின் ரகசியம் இதுவும்தான்.
நான் இதுவரை சொன்னதெல்லாம் அந்த வயலின்கள் நிறைந்த ஸ்ட்ரிங் செக்ஷனைத் தவிர்த்து, மற்ற இசைக்கருவிகளின் கூட்டு பற்றி.
அந்த வயலின் குடும்பத்திற்கென்றே தனித்ததொரு இசையழகு உண்டு. அக்குழு மட்டும் கூட்டாக வாசிக்கும்போது, ஒவ்வொரு முறையும் 'நம் இதயம் கவர்ந்திழுக்கப்படும்'. சிம்ஃபனி இசைக்கு முக்கியமாகப் பங்காற்றுவது இந்த ஸ்ட்ரிங் செக்ஷனே ஆகும்.
இந்த குழுவை வாசிக்கவைத்து நம்மை உருகவைப்பதிலும் ராஜாசார் கைதேர்ந்தவர். வரம் பெற்றவர்கள் நாம்.
இதெல்லாம் தெரிந்ததொரு விஷயமாக இருக்கிறதே, மற்ற இசையமைப்பாளர்களும் பின்பற்றலாமே என்ற கேள்வி நம்மில் கட்டாயம் எழும்.
முதலில் மேலே சொன்ன ஒவ்வொரு இசைக்கலைஞர்களுக்கும் தனித்தனி ஷீட் மியூசிக் (இசைக்குறிப்புகள் அடங்கிய ஏடு) தரவேண்டும்.
யார் யார் எந்தெந்த ஸ்கோர் வாசிக்கவேண்டும் என்பதை இசையமைப்பாளர் முடிவெடுத்து தெரிந்துவைத்திருக்க வேண்டும்.
அதை அந்த ஏட்டில் அந்த வடிவத்தில் அக்குறிப்பிட்ட இசைக்கலைஞருக்கான பகுதி மட்டும் இருக்குமாறு பிரித்து எழுத அந்த இசையமைப்பாளருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
அப்படியே தெரிந்திருந்தாலும் இத்தனைக் கலைஞர்களுக்கும் அவ்வளவு சிக்கிரத்தில் அதை எழுதிவிட முடியாது. எல்லாவற்றையும் ஒன்றிணைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. (ஒரு சிலருக்கு ஒரு பாடலுக்கே மாதக்கணக்கோ வருடக்கணக்கோ ஆகக்கூட வாய்ப்பிருக்கிறது. அவ்வளவு யோசிக்கவேண்டிய விஷயங்கள் அதிலுள்ளன)
இப்படித் தனித் தனியே எழுதிக் கொடுக்கத் தெரிந்தால்தான் அந்த இசையமைப்பாளருடைய சொந்த முயற்சியில் அந்த இசை உருவாகி இருக்கிறது என்று அர்த்தம்.
மேலே சொன்ன இத்தனை கஷ்டமான விஷயங்களையும் நம் இசைமேதை இளையராஜாசார் செய்து முடிக்க ஒரு பாட்டுக்கு அதிகபட்சமாக அரைமணி நேரம் மட்டுமே எடுத்துக்கொள்வாராம்.
இது எப்படி சாத்தியம்.
அதுதான் அதிசயம்.
அவருக்கு மட்டுமே அது முடிகிறது.
ஆகவேதான் அவரை இறையருள் பெற்றவர் என்று எல்லோரும் நம்புகிறோம், அவர் உள்பட.
அவருக்கே அது புரியாத விந்தையாக இருப்பதால்தான் அதை வேறு யாருக்கும் அவரால் பயிற்றுவிக்க முடியவில்லையோ என்ற ஐயம் என்னில் இல்லாமலில்லை.
இறுதியாக, எப்படி பல தேனீக்களின் உழைப்பால் ஒரே கூட்டில் சேகரிக்கப்பட்ட மலர்களின் இனிய திரவம், 'தேன்' ஆகி திகட்டாத சுவையுடன் நீண்டகாலத்திற்கு இயற்கையாகவே கெடாமல் இருக்கிறதோ,
அதுபோலவே எண்ணிக்கையில் நிறைந்த இசைக்கலைஞர்கள் கொண்டு ராஜாசாரால் இயற்றப்பட்ட இசையாவும் சலிப்புணர்வு ஏதுமின்றி மீண்டும் மீண்டும் கேட்டு மகிழும் வண்ணம் காலம் காலமாய் நிலைத்து நிற்கும்.
இதை நான் சொல்கிறேன் என்பதைவிட என் லாஜிக் இப்படி சொல்வதை நான் நம்புகிறேன் என்பதுதான் உண்மை.
இந்த 'ஜாம்' சம்பந்தமாக நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அவரவர் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.