இளையராஜா இசையமைத்த ‘என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்’ (வள்ளி), ‘காற்றில் எந்தன் கீதம்’ (ஜானி) போன்ற பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் இதயத்தை யாரோ பறித்தெடுத்துச் செல்வது போன்ற உணர்வுநிலைக்குத் தள்ளப்படுகிறேன். இந்த இரண்டு பாடல்களும் கீரவாணி ராகத்தால் மிக நுண்மையாகப் பின்னியெடுக்கப்பட்டவை - இந்த ராகம் பறவைகளுக்குப் பிடித்தமான ராகம் என்று சங்கீத நூல்கள் குறிப்பிடுகின்றன. பயணத்தின்போது ‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடல், ஒரு மரத்தில் பறவைகள் பறந்து எழுந்து மீண்டும் அமர்வது போன்ற உணர்வை நமக்குத் தருகிறது. பாடலுடன் பாடலின் நிரவல் இசைக்கோவையும் ஒன்றிணைந்து ஒரு காட்சிப் படிமமாகி, கவித்துவமான நுண் ஒலியால் நிரம்பியதே இளையராஜாவின் தனித்துவமான உலகம். அந்த உலகத்தில் கள்ளம் கபடமற்ற ஒருவரால் மட்டுமே பூரணமாகச் சஞ்சரிக்க முடியும்.
கல்யாணி ராகத்தில் அமைந்த ‘ஜனனி ஜனனி’ (தாய் மூகாம்பிகை) அவரே பாடிய பாடல். இறை நிலைக்கும், யோக நிலைக்கும் இப்பாடல் அழைத்துச் செல்வதை உணர்ந்திருக்கிறேன். ‘ஓம் சிவோஹம்’ (நான் கடவுள்) எனும் பந்துவராளி ராகத்தில் அமைந்த பாடல் மிரட்சியூட்டும் நிலைக்குக் கொண்டுசெல்கிறது. தாள வகைகளையும் அவர் விட்டுவைக்கவில்லை. ஒரே பாடலுக்கு ஒரு தாளத்தின் மிச்ரசாதியையும், கண்ட சாதியையும் ஒன்றிணைத்து அசத்தியிருக்கிறார்.
இளையராஜாவுக்கு ‘பத்ம விபூஷண்’ விருது அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது தொடர்பான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் அவர் நாட்டுப்புறப் பாடல்களைத் திரையிசையில் பயன்படுத்தி உலகறியச் செய்தவர் என்பதோடு நிறுத்திவிடுகின்றன. அவர் நாட்டுப்புற இசையை மட்டும் உலகுக்கு எடுத்து விளம்பவில்லை. நாட்டுப்புற இசைக்குள் இருக்கும் செவ்வியல் தன்மையை எடுத்து, அதே இசைக்கு ஒத்த மேல் நாட்டு இசைக் கருவிகளின் ஓசைகளோடு சேர்த்திழைத்துவிடுகிறார். அதற்கு உதாரணம் ‘தென்றல் வந்து தீண்டும்போது’ (அவதாரம்) பாடல். படத்தில், பார்வையில்லாத நாயகியின் முன்னால் இசை வண்ணங்களைக் குழைத்து ஒரு ஓவியக் கலவையை வீசுகிறபோது, அந்தப் பெண்ணின் மனக்கண் திறந்து நிறங்களை உணர்ந்துகொள்கிறது. அது போன்று ஹிந்துஸ்தானி ராகத்தின் ஜோக், ஜோன்பூரி, பூபாளி, பஹாடி போன்ற ராகங்களை நம் மண்ணுக்குத் தக்கபடி உள்ளுணர்ந்து தமிழுக்குக் கொடையாகத் தந்திருக்கிறார். குறிப்பாக, ‘மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட’ (மெட்டி) என்கிற பாடலில் இளையராஜாவே முதலில் ஒரு ‘ஹம்மிங்’ செய்திருப்பார். இந்தப் பாடலில் யாராலும் மயங்காமல் இருக்க முடியாது.
பெரும்பாலும் திரையிசையில் பெரிய அளவில் பயன்படுத்தப்படாத ராகங்களை இசையமைத்துப் பாடுவதில் தன் தனித்துவத்தைப் புதுப்புது வடிவங்களில் வெளிப்படுத்தியிருப்பார். குறிப்பாக, ‘அமுதே தமிழே அழகிய மொழியே’ (கோயில் புறா) என்கிற பாடல் ஒரு நல்ல கவிதையைப் போன்று என்னைத் தொந்தரவு செய்துகொண்டிருந்தது. அது சித்த ரஞ்சனியுமில்லை, கர்ண ரஞ்சனியுமில்லை.
இந்த ராகத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று எனக்குள் ஒரு சொல்ல முடியாத போராட்டம் நடந்தது. எனது குருநாதர் காலமாகிவிட்டார். மற்றொரு குருநாதரிடம் விசாரித்தேன். பதில் கிடைக்கவில்லை. பிறகு, இளையராஜாவின் பேட்டி ஒன்றை இணையதளத்தில் பார்த்தேன். ‘அந்த பாடல் ப்ரிய ரஞ்சனி ராகம்’ என்று குறிப்பிட்டிருந்தார். எனக்கு இந்த ராகம் புதியது. கேரளாவில் உள்ள பல இசை வல்லுநர்களிடமும் விசாரித்தேன். இதுவரை இப்படி ஒரு ராகம் இருப்பது என்பது எங்களுக்குத் தெரியாது என்றனர். பிறகு, ஆந்திராவில் உள்ள ஒரு பரதநாட்டிய ஆசானிடம் இது பற்றிக் கேட்டேன். அவர் அந்த ராகத்தின் ஆரோகணம் அவரோகணத்தை அனுப்பித் தந்தார்.
இப்படி வழக்கில் இல்லாத அரிதான ராகங்களையும் எடுத்துக் கையாள்வதில் வல்லவர் இளையராஜா. நாட்டார் பாடல், பண் இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி , மேற்கத்திய இசை வடிவங்களை நம் மண்ணுக்கே உரிய தன்மையோடு தந்த இளையராஜா தனித்துவம் மிக்க இசைமேதை!
-என்.டி.ராஜ்குமார், கவிஞர்.
No comments:
Post a Comment