Saturday, November 11, 2017

திறனறிந்து சொல்லுக

திறனறிந்து சொல்லுக

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் 

பொருளும் அதனினூஉங்கு இல்.


ஒரு அரசனுக்கு அவனுடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது. இதனால் காலையில் பதற்றமாக எழுந்த அவன், அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி ஜோதிடரை வரவழைத்தான்.

அந்த நாடி ஜோதிடர் தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் பொக்கை வாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு, அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள் என்று பலன் சொன்னார்.

உடனே அந்த அரசன் மிகவும் கோபமுற்று, இவனைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்! என்று உத்தரவிட்டான். அதன் பிறகும் மன்னனின் மனம் சமாதானமடையவில்லை. இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து, அவரிடம் தன் பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன என்று வினவினான்.

அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார். அவரும் அதைப் பார்த்துவிட்டு, மன்னா! உங்கள் சொந்த, பந்தங்களையெல்லாம் விட நீங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்வீர்கள் என்று பலன் கூறினார்.

இதனால் மனம் குளிர்ந்த அரசன், அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தான். இருவரும் அதே ஓலையைத்தான் படித்தார்கள், அதே விஷயத்தைதான் சொன்னார்கள். ஒருவர் எல்லோரும் இறந்துவிடுவார்கள் என்றார், இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார், அவ்வளவுதான் வித்தியாசம்.

தத்துவம் :

அந்த இரு புலவர்கள் சொன்ன செய்தி ஒன்று தான். ஆனால் அதில் உள்ள கூற்றை இரு புலவர்கள் சொன்ன விதம் தான் வேறு.

ஓர் இடத்தில் நாம் ஒரு செய்தியை கூறும்முன் எவ்வாறு கூற வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நாம் சொல்லும் விதத்தில் தான் நமக்கான அங்கீகாரம் கிடைக்கப் பெறும்.

No comments:

Post a Comment